ஆதரவு 125 .. எதிர்த்து 112.. ஆர்ஜேடி வெளிநடப்பு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் வெற்றி

Su.tha Arivalagan
Feb 12, 2024,06:21 PM IST

பாட்னா: பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 125 பேரின் ஆதரவு கிடைத்தது. எதிர்த்து 112 வாக்குகள் பதிவாகின. முன்னதாக ராஷ்டிரிய ஜனதாதளம், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்புச் செய்தனர்.


பீகாரில் ஆர்ஜேடி கூட்டணியை உதறி விட்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார் நிதீஷ் குமார். இந்த நிலையில் பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர் நிதீஷ் குமார். இதையடுத்து சூடான விவாதம் நடந்தது.




அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், உணர்ச்சிகரமாக பேசினார். நிதீஷ் குமாரை தந்தையாகத்தான் நினைக்கிறேன். இன்று தசரதனாக நிற்கிறார் நிதீஷ் குமார். தசரதன் தனது மகனை மட்டுமே காட்டுக்கு அனுப்பினார். ஆனால் நிதிஷ் குமாரோ, மொத்த பீகாரையும் காட்டுக்கு  அனுப்பியுள்ளார் என்றார்.


பின்னர் நிதீஷ்குமார் பதிலுரைக்குப் பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. அந்த சமயத்தில் ஆர்ஜேடி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இறுதியாக நடந்த வாக்கெடுப்பில் 125 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து 112 வாக்குகள் விழுந்தன. இதனால் நிதீஷ் குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.