மீண்டும் அமைச்சராகும் பொன்முடி.. பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Su.tha Arivalagan
Mar 13, 2024,07:00 PM IST

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு  தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. அவர் உறுப்பினராக இருந்து வந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்தது.




இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அதாவது தீர்ப்பை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைத்துள்ளது. மேலும் திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அறிவிக்கையையும் சட்டசபை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது.


இதைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ஆர். என். ரவிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இன்று அல்லது நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.