தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.. மக்களைச் சந்தித்தார்

Su.tha Arivalagan
Dec 21, 2023,01:21 PM IST

- மஞ்சுளா தேவி


தூத்துக்குடி: அதீத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல்லைக்கும் அவர் செல்கிறார்.


முதற்கட்டமாக தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தில் இருந்து பாதுகாப்பு முகாமிற்கு சென்று அங்கு மக்களைச் சந்தித்தார். முகாமில் உள்ள 600 பேருக்கு நிவாரண  பொருட்களான அரிசி, வேட்டி ,சேலை, போர்வை, பாய் பவுடர், ரொட்டி உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து அதிக பாதிப்பை சந்தித்த பகுதிகளான முத்தமாள் காலனி ,குறிஞ்சி நகர், ரஹ்மத் காலனி ஆகிய பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டார்.


இதனை முடித்துவிட்டு திருநெல்வேலிக்கு கார் மூலமாக செல்ல இருக்கிறார். அங்கு உள்ள நெல்லை சந்திப்பு  உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். பிறகு அங்கு உள்ள காவல் கட்டுப்பாடு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையை முடித்துவிட்டு செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இரு மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு மதுரை திரும்பும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்வார்.