அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த ரூ 21 கோடி.. ஆய்வுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Manjula Devi
Jul 19, 2024,05:33 PM IST

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் அம்மா உணவகம் செயல்பாடுகள் குறித்தும், அங்கு உணவருந்தவர்களிடம் உணவுகளின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். இதன் பின் முதல்வர் தானே களத்தில் இறங்கி அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு அதன் தரத்தையும் உறுதி செய்தார்.


இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது, 




அம்மா உணவகங்களில் பழுதடைந்த பாத்திரங்கள் பழைய சமையல் உபகரணங்களை மாற்ற வேண்டும். இந்த பழைய பாத்திரங்களை மாற்றி புதிய சமையல் உபகரணங்கள் வழங்க வேண்டும். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புரனமைக்க 14 கோடி, மற்றும் பழைய சமையல் உபகரணங்களை மாற்றி புதிய உபகரணங்கள் வழங்க ஏழு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டும் என உத்தரவிட்டார்.


ஏழை எளியோர்கள் பயனடையும் வகையில் அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த வேண்டும். சமையல் கூடம், உணவு பரிமாறும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த மண்டலத்தில் உள்ள அம்மா உணவகங்களை

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது  ஆய்வு செய்து தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.




இது தவிர உணவின் தரம் ஒருபோதும் குறையாமல், தரம் சுவையுடன் உணவுகளை தயாரிக்க அம்மா உணவக பணியாளர்களுக்கு  அறிவுரையும் வழங்கினார்.


மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுக ஆட்சியின் கொண்டு வரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். ஏழை எளியோர் குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா சமயத்திலும் பலருக்கு இது உதவியது. மக்கள் வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகங்களை திமுக அரசு மேலும் சிறப்பாக நடத்த நிதி ஒதுக்கீடு செய்திருப்பது பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.