அடுத்த 2 ஆண்டு முக்கியம்.. சிறப்பாக செயல்படுங்கள்.. கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

Meenakshi
Jun 11, 2024,06:12 PM IST

சென்னை:   மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் போல் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட  உள்ளது. இன்னும் நிறைய திட்டங்கள் வரவுள்ளது. இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கல் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 


கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:




தேர்தல் பணிகளை மிகச் சிறப்பாக கையாண்ட உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் கடுமையான இந்தக் கோடை காலத்தில், குடிநீர் பிரச்சனை மற்றும் மின்வெட்டு ஆகியவை ஏற்படாமல் கவனமாக கையாண்ட உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2020-21 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாம் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்து, திட்டங்களின் பயன்கள் தேவையானவா்களுக்கு சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.


இதனை மக்களுடன் உரையாடிய எனது நேரடி அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். நமது அரசு கொண்டுவரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இருக்கிறது. இதனை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்களான உங்களுக்கு என்னுடைய நன்றி. அடுத்து வரப்போகும் நாட்களில் இன்னும் பல திட்டங்கள் அறிமுகம் செய்ய இருக்கிறோம். 


புதுமைப்பெண் திட்டம் போல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது போன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள். இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க 


1.சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு 


2. சிறந்த சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துதல் 


3. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்


4. பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்


ஆகிய நான்கு குறிக்கோள்களும் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம். இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள். அத்தகைய நல்லாட்சியை தான் நாம் வழங்கி வருகிறோம். ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அதற்கு அடிப்படையாக நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டியவற்றை எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு.


மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தினை வரும் ஜூலை மாதம் 15 ஆம் நாள் முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உங்களைத் தேடி உங்கள் ஊரில் மற்றும் நீங்கள் நலமா? போன்ற திட்டங்களும் செயல் படுத்தப்பட உள்ளது.


வருவாய் துறையில், பட்டா மாறுதல் சான்றிதழ்களை பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கும் இரண்டு லட்சம் தொகுப்பு வீடுகளை புனரமைக்கும் திட்டத்திற்கு நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.


அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் கல்லூரி கனவு உயர்வுக்கு படி போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடன் முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும். அதேபோல் விரைவில் தொடங்கப்படவிருக்கும் தமிழ் புதல்வன் திட்டமும் மிகவும் முக்கியமான திட்டம் ஆகும். இது பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.


முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். 2024-25 ஆம் ஆண்டில் தங்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைவில் காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளின் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும் இதனை கருத்தில் கொண்டு கிடைத்துள்ள குறுகிய காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு மாவட்டங்களில் திட்ட பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறேன்.


இன்னொரு மிக முக்கியமான கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது. போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல. சமூக ஒழுங்கு பிரச்சனை. எனவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து போதைப்பொருள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.