சென்னையில் வி.பி. சிங் சிலை.. மாநிலக் கல்லூரி வளாகத்தில்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Nov 27, 2023,07:03 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: முன்னாள் பிரதமரும் சமூக நீதிக் காவலர் என்று போற்றப்பட்டவருமான விஸ்வநாத் பிரதாப் சிங் முழு உருவச் சிலையை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


தமிழ்நாடு அரசின் சார்பில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


வி.பி.சிங் என அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பிறந்தார். பின்னர் புனேவில் உள்ள பெர்க்குசன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1950 ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றவர். சட்டமன்ற உறுப்பினராகவும் ,நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். 




ராஜீவ் காந்தி அமைச்சரவையில், பல்வேறு அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஜனதாதளம் என்ற கட்சியைத் தொடங்கி அகில இந்திய அளவில் புதிய அரசியல் சகாப்தத்தைத் தொடங்கியவர். மிகப் பெரிய கூட்டணியை அமைத்து பிரதமர் பதவிக்கும் உயர்ந்தவர். 


வி.பி.சிங் இந்தியாவின் ஏழாவது பிரதமராக இருந்தவர். பிற்படுத்த மக்களுக்காக பாடுபட்டவர்.  மண்டல் கமிஷன் பரிந்துரையை முற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அமல்படுத்தி நாடு முழுவதும் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நன்மை இழைத்தவர். சமூக நீதியைக் காத்தவர். 


இன்று வி.பி. சிங்கின் 15வது ஆண்டு நினைவு தினமாகும். இதையொட்டி வி.பி. சிங்கைக் கெளரவப்படுத்தும் வகையில் அவரது சிலையை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது திமுக அரசு. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும், வி.பி.சிங்குக்கும் நல்ல நட்பு இருந்தது. காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு ஆதரவாக இருந்தவர் வி.பி.சிங். 


இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வி.பி சிங் பிரதமராக இருந்தது 11 மாதம்தான். ஆனால் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. அவரால்தான் இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலின, சிறுபான்மை, பழங்குடியின மக்கள் முன்னேறியுள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.