குளுகுளு கொடைக்கானலுக்கு.. குடும்பத்தோடு இன்று செல்கிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Manjula Devi
Apr 29, 2024,10:54 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு  மே 1ம் தேதி வரை முதல்வர் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி, ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் முடிந்து விட்ட நிலையில், தற்போது வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் மே 1ந் தேதி முதல் வெயிலின் தாக்கத்தால் வெப்ப அலை இன்னும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்  குளுமையான பகுதிகளுக்குச் சென்று ஓய்வெடுத்தும், பொழுதைக் கழித்தும் வருகின்றனர். இதனால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்  அதிகரித்துக் காணப்படுகிறது.




இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன்  கொடைக்கானல் செல்கிறார். அங்கு மே 4  வரை அவர் தங்கி இருக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று காலை 8 மணி அளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார் முதல்வர். அதந் பின்னர் மதுரையிலிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு செல்கிறார். 


கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மதியம் ஒரு மணிக்கு செல்லும் முதல்வர், மே 4ம் தேதி வரை தனது குடும்பத்துடன் ஓய்வு எடுக்க இருக்கிறார்.


முதல்வர் மு க ஸ்டாலின் வருகையை ஒட்டி கொடைக்கானலில் 1500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை


இதற்கிடையே, முதல்வர் சுற்றுப்பயணத்தால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு தேவையில்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் பயணத்தின் போது எவ்வித போக்குவரத்து மாற்றமோ.. வேறு எந்த பொது மக்களுக்கான சேவைகள் நிறுத்தமோ.. செயல்படுத்தவில்லை. கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வழக்கம்போல் சென்று பார்வையிடலாம். அங்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. 


பொது மக்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் முதல்வரின் பயணம் இருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பும் திட்டமிடப்பட்டுள்ளது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.