தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள்.. தொடங்கி வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர விழா கொண்டாட்டத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் பி.பார்ம், டி ஃபார்ம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும்,ஏழை எளிய மக்கள் 20 முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகளைப் பெறவும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தியாகராயர் நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 18, தொழில்முனைவோர் வாயிலாக 15 என மொத்தம் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகின்றன.
அதேபோன்று, அதிகபட்சமாக மதுரையில் 52 இடங்களிலும், கடலூரில் 49 இடங்களிலும், கோவையில் 42 இடங்களிலும், தஞ்சாவூரில் 40 இடங்களிலும் என மொத்தம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் குறைந்த விலைக்கு மருந்துகளை வாங்கி கொள்ளலாம் எனவும், சித்தா, ஜெனிரிக், ஆயுர்வேதம், யுனானி, சர்ஜிக்கல் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.