மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம்.. தர்மபுரியில் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jul 22, 2023,04:06 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24ம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைக்கவுள்ளார்.


சட்டசபைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1000 தரும் திட்டம். இந்த வாக்குறுதியை தற்போது திமுக அரசு நிறைவேற்றவுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இது அமலுக்கு வருகிறது.




இதுதொடர்பான முகாம்கள் தற்போது நடத்தப்படவுள்ளன. இந்த முகாமை தர்மபுரியில் வருகிற 24ம் தேதி திங்கள்கிழமையன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.


இதுதொடர்பாக இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவீட்டில், மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.


தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.


தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.


#கலைஞர்100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.