தமிழ்நாடு பட்ஜெட் 2025.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை: 2025 -26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
பொதுவாகவே ஒவ்வொரு நிதியாண்டிலும் முதலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே மாநிலங்களின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
இதில் வருமான வரி விலக்கு, உச்சவரம்பு உயர்வு என ஒரு சில அறிவிப்புகள் மக்களிடையே பாராட்டைப் பெற்றாலும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை . பீகார் மாநிலத்திற்கு மட்டும் தாராளமாக சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி அரசியல் களத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசு தமிழ்நாட்டு பட்ஜெட்டை பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என இரண்டாகப் பிரித்து தனித்தனியாக தாக்கல் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொது பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விரைவில் தாக்க செய்ய இருக்கிறார். இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அனேகமாக இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் குறித்த அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பொது பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் அதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்