மகளிர் உரிமைத் திட்டம்...  அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

Meenakshi
Sep 16, 2023,12:47 PM IST

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். 


காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தநிலையில் தற்போது, இத்திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.




இது தொடார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன். 


இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள்,  நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!


களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலிந்


நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு


இதற்கிடையே, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் 18ம் தேதி அவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் விளக்கம் தரப்படும் என்றும், உங்களின் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எழுத்துப் பூர்வமாக விண்ணப்பம் செய்த மகளிருக்கு வருவாய்த்துறை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 


எனவே, உண்மையான பயனாளி விடுபட்டு இருந்தால் உடனே அதற்கான ஆதாரத்துடன் செப்டம்பர் 18ம் தேதி  மீண்டும் அதிகாரிகளை அணுகி திட்டத்தின் கீழ் பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அவர்களது விண்ணப்பங்கள் கோடாட்சியர் மூலம் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.