அடுத்தவருக்கு உதவுங்கள்.. வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Dec 27, 2023,05:54 PM IST

சென்னை: அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று மானுடம் தழைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் சமீபத்தில் மிகப் பெரிய மழையைக் கண்டன. வரலாறு காணாத அளவுக்குப் பெய்த பெரு மழையாலும், அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்திலும் சிக்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.




சேதத்திலிருந்து இன்னும் அந்த மாவட்ட மக்கள் முழுமையாக மீள முடியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத மிகப் பெரிய இயற்கை சீற்றம் இது. பொருட் சேதம், உயிர்ச்சேதம், வாழ்வாதார சேதம் என்று அனைத்து வகையிலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அடி வாங்கியுள்ளன. பலருக்கு அடுத்த நாள் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது.


அனைத்துத் தரப்பினும் ஓடி ஓடி அங்குள்ள மக்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். இன்னும் கூட நிவாரணப் பணிகள் முடியவில்லை.. அத்தனை சீக்கிரம் அது முடியுமா என்றும் தெரியவில்லை. அந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.




இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவியோருக்கு நன்றி கூறி நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் போட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், "THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS" என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது.


அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.