இசையில் குறுகிய அரசியலை கலக்காதீர்கள் .. முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்

Su.tha Arivalagan
Mar 23, 2024,10:43 AM IST

சென்னை: இசையில் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். பெரியாரை வசை பாடுவது நியாயமற்றது என்று  இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா விவகாரம் தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அளிக்க மெட்ராஸ் மியூசிக் அகாடமி முடிவு செய்துள்ளது. இதற்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் பெரியார் குறித்து இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா பாடிய கர்நாடக இசை பாடலலே. இந்த விவகாரம் தற்போது அரசியலாகியுள்ளது. பலரும் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். சென்னை மியூசிக் அகாடமியும் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை நியாயப்படுத்தி நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலினும் டி எம் கிருஷ்ணா விவகாரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:




டி எம் கிருஷ்ணா  அவர்கள் மியூசிக் அகாடமி இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். . கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பால் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. 


இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. 


பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.


டி எம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!