சென்னை மெட்ரோவுக்கு நிதி.. மதுரை, கோவை மெட்ரோவுக்கு அனுமதி தாருங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Jul 21, 2024,05:10 PM IST

சென்னை: சென்னை மெட்ரோவுக்கு கடந்த 3 வருடங்களாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ள நிலையில் வருகிற பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7வது மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், இதுதொடர்பாக சில கோரிக்கைகளை தனது எக்ஸ் தளம் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு:


- மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் #ChennaiMetroRail திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


- தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.


- பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.


- கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.


- தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


- கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்.


உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மிகச் சிறப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோவை அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவுத் திட்டங்களும், ஆய்வுப் பணிகளும் கூட முடிவடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.