வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலைமை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை புளியந்தோப்பில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 


அப்போது அவர் பேசுகையில், வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதை எல்லாம் மாற்றி வளர்ச்சி சென்னை ஆக மாற்றி வருகிறோம். தென் சென்னை மத்திய சென்னை போன்று வடசென்னையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வட சென்னை வளர்ச்சிக்காக ரூபாய் 6400 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம். அறிவிக்கப்பட்ட எஞ்சிய திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.


புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதில் அறிவிக்கப்படவில்லை. தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கிய மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிக்க தவறியவர்களுக்காகவும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.