வள்ளுவரைத் தொடர்ந்து இப்போது தூர்தர்ஷனுக்கே காவி அடித்துள்ளனர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

Su.tha Arivalagan
Apr 21, 2024,11:59 AM IST

சென்னை: தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் தூர்தர்ஷன் டிவியின் லோகோ அதாவது இலச்சினை தற்போது காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது அரசியல் பாரபட்சமான நடவடிக்கை  என்று தலைவர்கள் வர்ணித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த லோகோ நிற மாற்றத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; 


பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!  தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.