காலை உணவுத் திட்டம்.. கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Su.tha Arivalagan
Aug 25, 2023,09:42 AM IST
நாகப்பட்டனம்: விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நாகப்பட்டனம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து அவரும் சாப்பிட்டார். இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும இருந்து வந்த இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைத்தரா். 4 நாட்கள் சுற்றுப்பயணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் முதல்வர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருக்குவளை அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.



முதலில் மாணவர்கள் சிலருக்கு அவரே உணவு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தனக்கு அருகே இருந்த சிறுமியிடம் உன் பெயர் என்ன, நான் யார்னு தெரியுமா.. சாப்பாடு நல்லாருக்கா.. என்ன படிக்கிறே என்று கேட்க அந்த சிறுமியும் ஆவலுடன் பதிலளித்தார்.

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலமாக 17 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.