ரூ. 3 கோடியில் 5 சொகுசு பேருந்துகள்.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. புதுப் பாய்ச்சலில் TTDC

Meenakshi
Jul 01, 2024,05:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா  வளர்ச்சி கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக ரூ. 3 கோடி மதிப்பில் 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


ஏராளமான உள்ளூர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலவாணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலா துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத்தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலா துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.




மேலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தரும் வகையில் தமிழ்நாட்டின் நகரங்களில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையிலான ரயில் சேவைகளும், தேசிய மாநில நெடுஞ்சாலை இணைப்பு வசதிகளும் அதிக அளவில் கொண்ட மாநிலமாகவும், பேருந்து உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.


தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திடும் வகையில் கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத் திட்டங்கள், ஹோட்டல் தமிழ்நாடு என்ற பெரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயணத் திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்-மாமல்லபுரம், திருப்பதி-திருவண்ணாமலை, ஸ்ரீபுரம் தங்க கோயில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டங்களும், எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா கோவா-மந்த்ராலயம்  சுற்றுலா பயணத்திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயணத் திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட நான்கு பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட ஒரு பேருந்து என ஐந்து புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய gps கருவி, வைபை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருள்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.




இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் மணிவாசகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.