யாமிருக்க பயமேன்... பழநியில் கோலாகலமாக தொடங்கியது.. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024

Aadmika
Aug 24, 2024,10:02 AM IST

பழநி : பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 இன்று காலை தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 


ஆகஸ்ட் 24ம் தேதியான இன்றும், ஆகஸ்ட் 25ம் தேதியான நாளையும் இந்த விழா நடைபெறுகிறது.




தமிழ் கடவுளான முருகப் பெருமான் வழிபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது. முருகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் பல கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பான முருகப் பெருமானுக்குரிய தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் வெளிநாட்டவர்கள் கூட விழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். 


இந்நிலையில் பழனியில் தமிழக  இந்து அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய இரண்டு நாட்களும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.  இதில் முருகப் பெருமானின் பெருமையை உணர்த்தும் வகையில் அறுபடை வீடுகளில் கண்காட்சி, புகழ்பெற்ற முருகன் கோவில்களில் கண்காட்சி அரங்கம், வேல் வகுப்பு, ஆதீனங்களின் சிறப்பு உரை, திருப்புகழ் பஜனை, ஆன்மிக சொற்பொழிகள், கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், 3டி தொழில்நுட்பத்துடனான முருகன் பாடல் காட்சி அரங்கங்கள், வெளிநாட்டு முருக பக்தர்களின் சிறப்புரைகள் ஆகியவை இடம்பெற உள்ளன.




அதோடு விருது வழங்கும் விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தப்பட உள்ளது. முருகப் பெருமானின் பெருமைகளை உலகம் அறிய செய்வதர்களை பாராட்டும் வகையில் 15 முருகன் அடியாளர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட உள்ளது. வெளிநாட்டு அமைச்சர், பிரமுகர்கள், உள்நாட்டு பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் நேற்றிலிருந்தே பழநியில் குவிய துவங்கி விட்டனர். ஆகஸ்ட் 24, 25,26 என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை நாள் என்பதால் இன்றும் நாளையும் ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று காலை  மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அறுபடை வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் மற்றும் முருகன் திருத்தலங்களில் அரசு எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விரிவாக எடுத்துரைத்தார்.




இந்த 2 நாள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குன்றக்குட்டி பொன்னம்பல அடிகளால், தருமபுரம், மதுரை, மயிலம் ஆகிய ஆதீனங்கள், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். ஏராளமான ஆன்மீகத் தலைவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்