9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு.. தலா ரூ. 25 லட்சம் பரிசளித்துக் கெளரவம்!

Su.tha Arivalagan
Oct 02, 2023,04:22 PM IST

சென்னை: சென்னையில் நடந்த ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழகம் என்ற தலைப்பில் நடந்த விழாவில் 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், கெளரவமும் அளிக்கப்பட்டது. 


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழகம்" என்ற தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


சந்திரயான் திட்ட விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசளிப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் நிகழ்ச்சியில் பேசும்போது, 


தமிழ் அறிவு தான் அறிவியல் அறிவு. நான் முதலமைச்சராக மட்டும் இல்லை. நான் தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதே பெருமையாக கருதுகிறேன். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஒன்பது விஞ்ஞானிகள் இந்த மேடையில் அமர்ந்திருப்பது என் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கல்வியில் சிறந்த தமிழ்நாடு..

புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு... 

வள்ளுவன் தன்மை உலகுக்கே தந்து... வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ...

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு... என்று மகாகவி பாரதியார் அன்று தமிழ்நாட்டை புகழ்ந்து பாடினார். பாரதியார் இப்போது இருந்திருந்தால் சிவனும் ,மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தமிழ்நாடு... சங்கரனும், ராஜராஜனும் , ஷாஜியும் பிறந்த தமிழ்நாடு.. வீர முத்துவேல் பிறந்த தமிழ்நாடு... என்று புகழ்ந்து பாடி இருப்பார்.




அந்த அளவுக்கு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் நான் பெருமை அடைகிறேன். சந்திரயான்-3 நிலவில் இறங்கியதற்கு இணையாக தமிழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் கொடிகட்டி பறக்கும் தமிழர்கள் என்ற செய்தி அதிகமாக பரவியது.


ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் ஏன் உருவாகவில்லை என முன்பு கேட்டார் அறிஞர் அண்ணா. அவர் பெயரிலான அரங்கில் விஞ்ஞானிகளான உங்களைப் பாராட்டுவது சிறந்தது. தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேரில் ஆறு பேர் அரசுப் பள்ளியில் பயின்றவர்கள். இவர்கள் சாதாரண ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .அதிலும் குறிப்பாக இருவர் பெண்கள். திண்ணைப் பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி. சாதாரண பின்புலத்திலிருந்து சாதனை படைத்தவர் வீரமுத்துவேல்.


ஆகஸ்ட் 23 இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகே முக்கியமான நாள். நிலவில் சந்திரயான் இறங்கிய நாள் .அப்படிப்பட்ட முக்கிய நாளை உருவாக்கிய விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.  உழைப்புக்கான அங்கீகரமாக கருதி இதனை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.




மேலும் சாதனை விஞ்ஞானிகள் என்ற பெயரில் 9 பொறியாளர் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களாகிய நீங்கள் நாட்டுக்கு அப்பால் உள்ள உலகத்தையும் ஆராய வேண்டும். உங்களால் தான் அறிவியல் துறையில் இந்தியா தலை நிமிர்ந்து உள்ளது. பூமிக்கு அப்பால் உள்ள ஆராய்ச்சி தொய்வின்றி தொடரட்டும் சூரியனைப் பற்றியும் நிலவு பற்றியும் எல்லா ஆராய்ச்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்  என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்