இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Manjula Devi
Jan 02, 2024,05:44 PM IST

திருச்சி: இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவரது பேச்சு:


இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு. கல்வியில் சிறந்த நிறுவனங்கள் தொடர்பான எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் இடம் பெறும் .அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, கல்லூரி கல்வி, ஆராய்ச்சி கல்வி, கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். 




அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்ற குறிக்கோளுடன் சமூக நீதிப் புரட்சியை கல்வித் துறையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறது. இதுவரை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர். நான் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. உயர் கல்வி மாணவர்களின் சிந்தனைக்கு ஊக்கமளிக்கும் வகையில் சி.எம் ஃபெல்லோஷிப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தமிழ்நாட்டு மாணவர்களை படிப்பிலும், வாழ்க்கையிலும், வெற்றியாளர்களாக ஆக்க நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக கல்வி நிறுவனங்கள் உள்ளது. தலைசிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில், 15 கல்லூரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலைமை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம் என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.