உயர்கல்வி பயிலவுள்ள.. 447 அரசுப் பள்ளி மாணவர்களை பாராட்டி, லேப்டாப் வழங்கிய.. முதல்வர் மு க ஸ்டாலின்

Manjula Devi
Aug 02, 2024,03:21 PM IST

சென்னை:   அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க உள்ள 447 மாணவர்களுக்கு சென்னை அண்ணா நூலகத்தில் பாராட்டு விழா நடைபெற்ற போது அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மடிகணினிகளை வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின். 


முதன்மை உயர்கல்வி பயிலச்செல்லும் மாணவர்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது உயர்கல்வி செல்ல உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின்  மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:  தமிழ்நாட்டின் அறிவு சொத்துக்களாக விளங்கும் மாணவ கண்மணிகளைப் பாராட்ட வந்திருப்பதற்கு நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். மாணவர்கள் உயர்ந்தால் அந்தப் பெருமை ஆசிரியருக்கு உண்டு. குழந்தைகள் உயர்ந்தால் அந்தப் பெருமை பெற்றோர்களுக்கு உண்டு. எனவே உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்பு இல்லை என்றால் நாம் இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது.




54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். நாம் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மாணவ மாணவிகள் சாரசாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்கின்றனர்.2022 ஆம் ஆண்டு 78 மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு 274 மாணவர்கள்,இந்த ஆண்டு இரண்டு மடங்காகி மேலும் 447 மாணவர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடைபெற்ற முடியவில்லை. அதனால் இந்த எண்ணிக்கை தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது.


நமது திராவிட மாடல் ஆட்சி மலர்ந்த பிறகு எல்லாத் துறைகளும் மலர்ச்சி அடைந்திருக்கிறது. அதிலும் கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன். நாம் தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 34 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஏராளமான மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடம் கிடைக்கிறது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது கல்வித் துறையின் செயல்பாடுகள். இதற்கு முக்கியமானது இந்த கால நேரத்திற்கு ஏற்ப டெக்னாலஜி வளர்ச்சியில் கற்பிக்கும் முறையை நவீனமாக்கியது. 


எடுத்துக்காட்டாக ஒவ்வொரு பள்ளியிலும் ஹைடெக் லேப், மாடல் கொஸ்டின் பேப்பர் அனிமேஷனில் விளக்குகிறது. நான் முதல்வன் இணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன‌. பல்வேறு புதுமைகள் புகுத்தியிருக்கிறோம். இப்படி திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைவு தான் நம்முடைய மாணவர்கள் நம் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் படிக்கப் போகிறார்கள்.


கல்வித் துறை நிறுவனங்கள் என்றால் ஐஐடி, எம் ஐ டி, மட்டும் கிடையாது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி துறை, என எல்லாத் துறைகளிலும் முதன்மையாக விளங்குகிற உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். 16 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளில் உள்ள உலகின் சிறந்த பல்களைக்கழகங்களில் சேர முழுமையான ஸ்காலர்ஷிக்கள் பெற்றுள்ளனர்.


இந்தியாவோட முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு போகின்ற மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடுகளில் சென்று படிக்க இருக்கின்ற மாணவர்களின் கல்விச் செலவையும், முதல் பயணச்சலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களிலுக்கு போகிறது பெரும் சமூக பொருளாதாரத்திற்கான அடித்தளம். இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை என மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். அது மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிப்பார்கள். ஏன் விண்வெளியில் கூட நமது அரசு பள்ளி மாணவர்கள்தான் இனி ஆட்சி செலுத்துவார்கள். அவர்களுக்கு எனது அரசு துணையாக இருக்கும். 


முதன்மை கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களும், இயக்குனர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த மாணவ மாணவியர்கள் உங்கள் நிறுவனத்தில் தனிநபராக சேரவில்லை. தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக தான் சேர்ந்துள்ளனர். உங்கள் குழந்தைகளுடன் இந்த அரசு எப்போதும் துணையாக இருக்கும். அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் உதவிகளையும் தர வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.