வயநாடு நிலச்சரிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. கேரளாவுக்கு உதவுவோம் என்று அறிவிப்பு

Su.tha Arivalagan
Jul 30, 2024,11:00 AM IST

வயநாடு:   கேரளாவை உலுக்கி எடுத்துள்ள வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இறந்த உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். 


தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் அதி தீவிரமாக மாறியுள்ளது. பெரு மழையும், வெள்ளப் பெருக்குமாக உள்ளது. குறிப்பாக முண்டக்கை சூரல்மலை  என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.  மிகப் பெரிய அளவில் நடந்த இந்த நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க கடுமையா போராட்டம் நடந்து வருகிறது. 




ஏகப்பட்ட மீட்புப் படையினர் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து மழையும் பெய்து வருவதாலும், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாலும் மீட்புப் பணிகளில் பெரும் சவால் நிலவுகிறது.


இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வயநாடு பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு சம்பவம் நடந்து பலர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகவும் வேதனையுற்றேன் . விலை மதிப்பில்லாத உயிர்கள் பறி போயிருப்பது கவலை தருகிறது.


இன்னும் பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்குண்டு இருப்பதாக அறிகிறேன். அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும் நம்புகிறேன்.


நமது சகோதர மாநிலமான கேரளாவுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுக்க, தோள் கொடுக்க தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாடு எப்போதும் தயாராக இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.