ஈடி, ஐடி, சிபிஐ.. இதுதான் பிரதமர் மோடியின் குடும்பம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம்

Meenakshi
Apr 03, 2024,05:59 PM IST

சென்னை:  பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐதான் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


நாடாளுமன்ற  தேர்தல்  களம் தற்பொழுது அனல் பறக்கிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறா்கள். சில நேரங்களில் இந்த விமர்சனங்கள் படு சூடாக உள்ளது.  ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க எதிர் கட்சிகளை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில்  ஆங்கில இதழ் ஒன்றில்  வெளியான கட்டுரை ஒன்றில் பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என்று  தெரிவித்திருந்தது. 


இதனை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:




பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது  இந்தியன் எக்பிரஸ் நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.


10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?


“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!


மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.