வெள்ள பாதிப்பு பணிகளில் ஈடுபட..  தனிநபர் மற்றும் தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு!

Su.tha Arivalagan
Dec 06, 2023,06:54 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு  தொடர்பான நிவாரணப் பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.


சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுடன் இணைந்து உதவ  தனி நபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன் வர வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தலைநகரமான சென்னை மாநகரம் வரலாறு காணாத பெரு மழையால் ஸ்தம்பித்துள்ளது. இதனால் சென்னை மாநகரமே தனி தீவாக காட்சியளித்தது. மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் தற்போது பல பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து மெல்ல மெல்ல  மீண்டு வர தொடங்கியுள்ளது.




பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லை. தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அத்யாவசிய பொருட்களான பால் மற்றும் உணவுகள் கிடைக்காமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மீட்பு படையினர் இரண்டு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்வேறு  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் புயலின் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வுகள் நடத்தி மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார். புயலின் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க விஜயவாடாவில் இருந்து இன்று பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு வந்தனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து 50 தூய்மை பணியாளர்கள் வந்துள்ளனர். தற்போது சென்னை ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக, மீட்பு படையினருடன் சேர்ந்து தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளில்  ஈடுபடவும், மக்களுக்கு உதவும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபடலாம். மக்களுக்கு உதவ முன்வருபவர்கள்  9791149789 (ஷேக் மன்சூர்- உதவி ஆணையர்), 9445461712 (பாபு, உதவி ஆணையர்), 9895440669 (சுப்புராஜ், உதவி ஆணையர்), 7397766651  (பொது) என்ற whatsapp எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 


பதிவு செய்யப்படும் தனி நபர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் மீட்பு பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.