வெயில் காலங்களில்.. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Manjula Devi
Apr 26, 2024,11:41 AM IST
சென்னை: வெயில் காலத்தை சமாளித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தும், முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பரவலாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இது தவிர சில பகுதிகளில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் கொளுத்துகிறது. 

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:



*வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர்களை, வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நல குறைபாடுகள் உடையவர்களை, மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.

*வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும், தலையில் பருத்தி துணி, துண்டு தொப்பி, அணிந்து கொள்ள வேண்டும்.

*பயணத்தின் போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

*வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

*தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ் பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிகளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு, அல்லது அடி வயிற்று வலி ஏற்பட்டால் அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்.

இது தவிர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:

*கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறேன்.

*தமிழ்நாட்டில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சமூக நல மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனைகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

*கோடை வெப்பத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக பொதுமக்கள் பாதுகாக்க இருக்க வேண்டுகிறேன்.

*அரசு அதிகாரிகள் அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.