ஜூன் 4.. வாக்கு எண்ணிக்கையின்போது.. விழிப்புணர்வுடன் இருங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Su.tha Arivalagan
Jun 01, 2024,11:20 AM IST

சென்னை:  ஜூன் 4ம் தேதி புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவை அறிய இந்திய மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளும் கூட ஆர்வமாக காத்துள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து விவாதிக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய உத்திகளை வகுப்பது குறித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.




இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். இந்த நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

 

வெப்ப அலை இன்றே கடைசி.. வெப்பச் சலனத்தால் பரவலாக கன மழை.. வெதர்மேன்


தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.


ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.  பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.