வீடு வீடாக செல்லுங்கள்.. திமுக அரசின் சாதனையை மக்களிடம் சொல்லுங்கள்.. ஸ்டாலின் உத்தரவு

Su.tha Arivalagan
Apr 04, 2023,09:56 AM IST
சென்னை: திமுக  சார்பில் சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைகளைச் சொல்ல வேண்டும். மக்களுக்குப் பணியாற்ற நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாலை நேரங்களை இதற்காக செலவிட வேண்டும். குறைந்தபட்சம் வார இறுதி நாட்களிலாவது மக்களை சந்திக்க வேண்டும். விடுமுறை நாட்களையும் உபயோகமாக கழித்து மக்களை சந்திக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும். வீடு வீடாக செல்வது, துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பது ஆகியவற்றின் மூலம் திமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக நீண்டதொரு கடிதத்தை மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கான முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

மக்களைத் தேடி வீடு வீடாக செல்லுங்கள்.  கொரோனா லாக்டவுன் காலத்தின்போது ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ. 4000 உதவித் தொகை தந்ததை மக்களுக்கு நினைவூட்டுங்கள்.  பொங்கல் பரிசு உரிய காலத்தில் கொடுக்கப்பட்டதை நினைவூட்டுங்கள்.

மகளிருக்கு இலவச பஸ் பயண சலுகை, ஆவின் பால் விலையில் ரூ. 3 குறைப்பு, புதுமைப் பெண் திட்டம், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம், விவசாயிகளுக்கு கூடுதல் மின்சாரம், பெண்களுக்கு ரூ. 1000 உரிமைத் தொகைத் திட்டம் ஆகியவை குறித்து மக்களுக்கு விளக்குங்கள்.

பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் திராவிட மாடல் அரசாங்கம் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து அமல்படுத்துவதை மகளிரிடம் விளக்க வேண்டும்.

உறுப்பினர் சேர்க்கையிலும் திமுகவினர் தீவிரம் காட்ட வேண்டும். மாலை நேரங்களை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டு கட்சியின் உறுப்பினர் பலத்தை அதிகரிக்க உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.