கொண்டாட்டங்கள் தேவையில்லை.. மக்களை சந்தித்து நன்றி சொல்லுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Jun 05, 2024,09:47 PM IST

சென்னை: நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான 40க்கு 40 என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பெற்ற தேர்தல் வெற்றி தொடர்பாக திமுகவினருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர் கூறியிருப்பதாவது:


2022 ஆம் ஆண்டு விருதுநகரிலே நடைபெற்ற முப்பெரும் விழாவிலே நான் உரையாற்றும் போது, நாற்பதும் நமதே.. நாடும் நமதே என்ற முழக்கத்தை முதன் முதலில் முன் வைத்தேன். அது முழக்கமாக மட்டும் இருந்து விடக்கூடாது, முழுமையான வெற்றியாக விளைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை பூத் வாரியாக  மேற்கொண்டது திமுக. ஒவ்வொரு நாளும் கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தேர்தல் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். நானும் ஓய்வெடுக்கவில்லை. திமுக தொண்டர்களாம் உங்களையும் ஓய்வெடுக்க விடவில்லை.




2019 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சியினர் எப்படி 2021 சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்றார்களோ, அதுபோலவே இந்த 2024 மக்களவைத் தேர்தல் களத்திலும் பாசிசத்தை  வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்கும் லட்சிய நோக்கத்துடன் ஒரே அணியாக ஒருங்கிணைந்து நின்றனர். நமது நோக்கத்தை அறிந்து கூடுதலான ஆதரவை வழங்கிய இயக்கங்களுக்கும் தோள் கொடுத்து நின்றன. இந்தியா கூட்டணியின் நம்பிக்கை மிக்க களமாக தமிழகம் அமைந்தது.


மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஒன்றி விட வேண்டும் என திட்டமிட்டார்கள். வன்ம விதைகளை தூவினார்கள்.வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். வன்ம விதைகளைத் தூவினார்கள். வதந்தி நீர் ஊற்றி அதனை வளர்க்கப் பார்த்தார்கள். நாட்டின் பிரதமர் எட்டு முறை தமிழகத்துக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். தோழமைக் கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். அவர் வழியிலேயே அவரது கட்சியினரும் செயல்பட்டனர்.


மற்றொருபுறம், இந்த மதவாத சக்திகளுக்கு அடிமை சேவகம் செய்த அதிமுக தனித்து நிற்பதாகக் கூறி மறைமுக கூட்டணியாக செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழகத்துக்கு எந்த அளவு ஆபத்தானவை, எந்த அளவுக்கு கேடானவை என்பதை கொள்கை தெளிவுடன் எடுத்துரைப்பது மட்டுமே தேர்தல் களத்தில் எனது பரப்பரை வியூகமாக அமைந்தது. திமுக வெறுப்பு பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது. தமிழக மேடைகளில் தமிழைப் போற்றுவது போலப் பேசும் பிரதமர் உள்ளிட்ட மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை தமிழகத்தையும் தமிழ் மக்களையும் எந்த அளவுக்கு வஞ்சித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தோம்.


கடந்த மூன்று ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சிகள் எத்தனை எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, எத்தனை கோடி மக்கள் அதனால் பயனடைந்து இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னோம். இண்டியா கூட்டணியால் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும், ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பது சுட்டிக்காட்டினோம். திமுகவின் தேர்தல் அறிக்கையும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையும் தோழமைக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் மக்கள் நலன் காக்கும் வகையில் இருப்பதை விளக்கினோம். பன்முகத் தன்மை கொண்ட, மத நல்லிணக்கத்துடனான சமூகநீதி இந்தியாவைப் பாதுகாத்திட இண்டியா கூட்டணியால்தான் முடியும் என்பதை கொள்கை வழியில் எடுத்துரைத்தோம். எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டிய அவசியத்தை தோழமைக் கட்சியினரும் எடுத்துச் சொன்னார்கள். நாம் மக்களை நேரடியாக சந்தித்தோம். 


மூன்று ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அவர்களை சரியாக சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். அவர்களின் கோரிக்கைகளை கேள்விகளுக்கும் செவிமடுத்தோம். அதைவிட முக்கியமாக, திமுக கூட்டணி மீதுதான் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை களத்தில் கண்டோம். அவர்களின் நம்பிக்கைதான் என்று முழுமையான வெற்றியாக விளைந்திருக்கிறது.


இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ள.. ஆட்சிக்கு ஆதரவு தர நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு நிபந்தனைகள்


40 தொகுதிகளில் ஏறத்தாழ பாதி அளவு தொகுதிகளில் தான் திமுக போட்டியிட்டது. மீதம் இருந்த தொகுதிகள் தோழமை கட்சிகளின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் வண்ண பகிர்ந்து அளிக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளும் நமது தொகுதிகள் தான் என்ற தோழமை உணர்வுடன் திமுக தொண்டர்கள் தேர்தல் பணிகளை நிறைவேற்றினா். திமுக போட்டியிட்ட தொகுதிகளில் தோழமைக் கட்சியினர் துணை நின்று பணியாற்றினர். இத்தகைய ஒருங்கிணைப்புதான் 40 தொகுதிகளில் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.


இதற்குக் காரணமான, தோழமை கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு அமையாத நிலையிலும், இந்தியாவைக் காத்திட இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று லட்சிய நோக்கத்துடன் முழு மூச்சாய் செயலாற்றிய அரசியல் இயக்கத்தினர், அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியை உரித்தாக்குகின்றேன். திமுக தலைமையிலான அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து மூன்று ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் பயன் மிகு திட்டங்களுக்கு நற்சான்றளிக்கும் வகையில் 40 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள்ளித் தந்து தமிழக வாக்காளர் பெருமக்களுக்கு கோடான கோடி நன்றி.


மத்திய ஆளும் கட்சியின் அதிகார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றை தகர்த்தெறிந்து 40க்கு 40 என்ற மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே அணி முழுமையான வெற்றி பெற்றது என்பது ஒரு சில மாநிலங்களில் தான். அதில் இண்டியா கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைத்திருப்பது தமிழகம்- புதுச்சேரியில் மட்டும் தான் என்பது திமுக தொண்டர்களின் ஓயாத உழைப்புக்கும், நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குமான சான்று. 


தமிழ்நாட்டில்.. 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாஜக!


மக்கள் நமக்கு மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள். அதை கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள். அவர்களின் குரலாக மக்களவையில் ஒலிப்போம் என்ற உறுதியினை அளியுங்கள். தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவதும், மாநிலத்தின் நலனை காக்கும் செயல்பாடுகளுமே உண்மையான வெற்றி கொண்டாட்டம் ஆகும்.


நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான 40க்கு 40 என்ற இந்த வெற்றி, இந்திய அரசியலின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனி பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு காட்டுகிறது. அவர்களின் கோட்டை என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. மக்களவையில் சரிக்கு சரியாக இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் இடம்பெறவிருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.


சர்வாதிகாரத்தனமான ஒற்றை ஆட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை கோயில் கட்டி மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறை நம்பிக்கை உள்ள வாக்காளர்கள், சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கி இருக்கிறது. தமிழகத்திலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால்  சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில் நாட்டை வழிநடத்தும் பணியை இந்திாய கூட்டணி மேற்கொள்ளும். அதற்காக 40க்கு 40 என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.