வெள்ளப் பகுதிகளில் சிக்கியிருப்போர் தொடர்பு கொள்ள ... வாட்ஸ் ஆப் எண் 8148539914!

Su.tha Arivalagan
Dec 18, 2023,06:54 PM IST

சென்னை: தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கித் தவிப்போருக்கு உதவ வாட்ஸ்அப் எண்ணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்:


அதி கனமழையால் அல்லலுறும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, எற்கனவே களப்பணியில் ஈடுபட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ப.மூரத்தி, கீதா ஜீவன், மனோ தங்கராஜ்,  எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, ஞானதிரவியம் ஆகியோரைக் கூடுதலாக நியமித்துள்ளேன்.


உதவி தேவைப்படும் பொதுமக்கள் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும்,  @tn_rescuerelief

என்ற எக்ஸ் தள முகவரியிலும் தொடர்புகொள்ளவும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.




களம் குதித்த பொதுமக்கள், கட்சியினர்


இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் பெருமளவில் இறங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டு சென்று உதவி செய்து வருகின்றனர்.


பல்வேறு கட்சியினர், ரசிகர் மன்றத்தினர் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தென் மாவட்டங்களில் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் வெள்ளக்காடானதில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக தென்கோடி மாவட்டங்கள் நான்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.