கல்விக்கு நிலம் தந்த வள்ளல்.. மதுரை ஆயி பரிபூரணம் அம்மாளுக்கு விருது.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 14, 2024,05:09 PM IST

சென்னை: அரசுப் பள்ளிக்கு நிலம் தந்து மக்களின் மனதில் உயர்ந்து நிற்கும் மதுரை கொடிக்குளம் ஆயி பரிபூரணம் அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது  வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மதுரை கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி பரிபூரணம் அம்மாள். இவர் அந்த ஊரைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக தனது பரம்பரை நிலமான 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்து அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


கல்விக்காக தனது பரம்பரை நிலத்தையே மனம் உவந்து கொடுத்துள்ள ஆயி பரிபூரணம் அம்மாள் மக்கள் மனதில் கோபுரம் அளவுக்கு உயர்ந்து விட்டார். அவரை பலரும் பாராட்டி வணங்கி வருகின்றனர். மதுரை எம்.பி . சு.வெங்கடேசன் ஆயி பரிபூரணம் அம்மாளை அவர் வேலை பார்த்து வரும் கனரா வங்கிக்கே போய் பாராட்டிப் பேசி வணங்கி விட்டு வந்தார். அவரை நாம் கொண்டாட வேண்டிய நேரம் இது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.




இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசும் ஆயி பரிபூரணம் அம்மாளை கெளரவிக்க முடிவு செய்துள்ளது. அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அளித்துக் கெளரவிக்கப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.


ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.


அரசு மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய கல்வி வள்ளல்தான் ஆயி அம்மாள். அத்தனை பேரும் அவரைப் பாராட்ட வேண்டும்.. கல்வி என்ற செல்வத்தை அடைவதற்காக எதையும் செய்யலாம் என்ற உந்து சக்தியை உருவாக்கியுள்ள ஆயி அம்மாள் அனைவருக்கும் சிறந்த ரோல் மாடல் என்பதில் சந்தேகம் இல்லை.