கதையை விடுங்க.. ஓவியம் மாருதிதானே.. மறக்க முடியுமா?

Su.tha Arivalagan
Jul 28, 2023,03:19 PM IST
சென்னை: எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள் பலருக்கும் அந்தப் பெருமை கிடைக்க ஓவியர் மாருதிதான் முக்கியக் காரணமே.. அப்படிப்பட்ட வரைகலை மன்னரான மாருதி இயற்கை எய்தியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் மக்களிடையே வாசிப்பு பழக்கம் வெகு அதிகமாக இருந்தது. குறிப்பாக வார இதழ்கள், மாத இதழ்கள், சிறுகதைகள், தொடர் கதைகளைப் படிக்க வெறியாக திரிவார்கள் அந்தக் காலத்து தமிழ் மக்கள். வாராவாரம் முக்கியப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகளுக்கு வெறித்தனமான ஃபேன்ஸ் இருந்த காலம் அது.



அத்தனை இதழ்களிலும் அப்போது கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஓவியர்களில் முக்கியமானவர் மாருதி எனப்படும் ரங்கநாதன். இவரது ஓவியம் இடம் பெறாத முக்கியப் பத்திரிகைகளே அப்போது கிடையாது. அவரது படங்கள் இடம் பெறாத கதைகளையும் அப்போது பார்க்க முடியாது. 

ஓவியர்களில் ஒரு சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் மாருதி. இவரது ஓவியங்களில் அந்த அளவுக்கு அழகும், இயல்பும் பிரமாதமாக இருக்கும். நேரிலேயே பார்ப்பது போல இருக்கும். குறிப்பாக இவரது பெண் படங்கள் அத்தனையுமே அத்தனை லட்சணமாக இருக்கும். அந்தக் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுப்பவை இவரது படங்கள்தான்.

கதை யார் என்பதை விடவும், ஓவியம் மாருதிதானே என்று பார்த்துப் பார்த்துப் படித்தவர்கள்தான் அப்போது அதிகம். கதாசிரியருக்குக் கிடைத்த அதே அளவிலான முக்கியத்துவமும், மரியாதையும், மாருதிக்கும் கிடைத்தது.
 


86 வயதான மாருதி சென்னையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஓவியர் மாருதி.