வட நாட்டில் ஏன் தமிழ் பிரச்சார சபா நிறுவவில்லை..? முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்தியர்கள் இந்தியை கற்க பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டது போல, வட இந்தியாவில் தென் இந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ திராவிட பாஷா சபையோ நிறுவ முடிந்ததா..? என ஒன்றிய அரசிடம் முதல்வர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது 72 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமலஹாசன், தவெக தலைவர் விஜய், ரஜினிகாந்த் என பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், என மும்மொழியில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் கூறியதாவது,
என் பிறந்தநாளுக்கு சகோதரி தமிழிசை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, என மும்மொழியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். எனக்கு தெலுங்கு தெரியாது.டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் பள்ளி பருவத்திலேயே தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை.தெலுங்கானா ஆளுநராக இருந்ததால் அவர் தெலுங்கு கற்று கொண்டுள்ளார். அதனால் தெலுங்கு மொழியில் வாழ்த்தியுள்ளார். ஒரு மொழியை வழிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்காக கற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை டாக்டர்.தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார். அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகின்ற உணர்வின் வெளிப்பாடு.
தமிழையும் பிற மொழியையும் அழிப்பது தான் பாஜகவின் நோக்கம்.பாஜக ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் . வடமாநிலத்தவர் தென்னிந்திய மொழிகளை கற்பதும், தென் இந்தியர்கள் இந்தியை கற்பதும் தேச ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என காந்தியடிகள் கருதினார். தென்னிந்தியர்கள் இந்தியை கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டது போல, வட இந்தியாவில் தென் இந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தரபாத தமிழ் பிரச்சார சபாவையோ திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா..? கோட்சே வழியை பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.
பாஜகவினர் தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒருவர் விரும்பும் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரி அல்ல. எந்த மொழிகளையும் எங்கள் மீது திணிக்காதீர்கள். அறிவியலை புறக்கணிக்கும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழி திணிப்பை கட்டாயமாக்குகின்றனர். ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது தான் மாணவர்களின் எதிர்காலத்திற்க்கு பயனளிக்கும் எனக் கூறியுள்ளார்.