திருவாரூரில்.. மார்ச் 23..முதல்வர் ஸ்டாலின்.. திருச்சியில் 24ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி..பிரச்சாரம்

Manjula Devi
Mar 20, 2024,09:28 AM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில்  வரும் மார்ச் 23ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 24ம் தேதி  திருச்சியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். 


கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் 23ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்‌. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெறும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். அப்போது தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.




இதற்காக வரும் 22ஆம் தேதி தஞ்சை செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். தஞ்சை தமிழ்  பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் 23ஆம் தேதி திமுகவின் முதல் பிரச்சாரம் பொது கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.


பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்ட டெல்டா மாவட்ட திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு முதல்வர் மு க ஸ்டாலின் அன்று சென்னைக்கு திரும்புகிறார்.  அடுத்த வாரத்தில் முதல்வர் மு க ஸ்டாலினுடைய இரண்டாவது தேர்தல் கட்ட பிரச்சாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எப்போது தேர்தல் பிரச்சாரம் நடத்துவது.. எந்தெந்த தேதிகளில் நடத்துவது ..என்பது தொடர்பான அட்டவணைகளை தயாரித்து தேர்தல் பிரச்சாரம் நடத்த திமுகவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


அதிமுக தேர்தல் பிரச்சாரம்




இதேபோல அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். மார்ச் 31ம் தேதி வரை அவரது முதல் கட்ட பிரச்சாரம் அமையவுள்ளது.


24ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி, 26ம் தேதி மாலையில் தூத்துக்குடி,  இரவில் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். 27ம் தேதி மாலை கன்னியாகுமரியிலும், இரவில் சங்கரன் கோவிலிலும் பிரச்சாரம் செய்து பேசுார்.


28ம் தேதி மாலை சிவகாசி இரவு, ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  மார்ச் 29ம் தேதி மாலை மதுராந்தகத்திலும்,  இரவு பல்லாவரத்திலும் பிரச்சாரம் செய்து பேசுவார் எடப்பாடி பழனிச்சாமி. மார்ச் 30ம் தேதி புதுச்சேரி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, மாலையில் அங்கு பேசுகிறார். 6 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுவார். மார்ச் 31ம் தேதி சிதம்பரம் பைபாஸ் சாலை, மயிலாடுதுறை , இரவில் திருவாரூர் ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் செய்து பேசவுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.