தலைமை ஆசிரியையுடன் மோதல்.. மல்லுக்கட்டு.. தாலியைப் பறித்த ஆசிரியை!

Meenakshi
Sep 29, 2023,01:45 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும், வேதியியல் ஆசிரியைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இருவரும் அடித்துக் கொண்டனர். அப்போது தலைமை ஆசிரியையின் தாலிச் சங்கிலியை ஆசிரியை ஆவேசத்துடன் பிடித்து இழுக்கவே பாதி சங்கிலி அவர் கையிலும், மீதிச் சங்கிலி தலைமை ஆசிரியை கழுத்திலுமாக பிய்ந்து போய் விட்டது. அதுபோல ஐந்து பவுன் தங்கச் சங்கிலியும் ஆசிரியை கைக்குப் போய் விட்டது.




சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை பெயர் ரத்தின ஜெயந்தி. வேதியியல் ஆசிரியை பெயர் ஸ்டெல்லா ஜெயசெல்வி. வேதியியல் ஆசிரியை தங்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஆசிரியை ஸ்டெல்லாவை தனது அறைக்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. கோபத்தில் ஆசிரியை ஸ்டெல்லா, தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.


பள்ளி வளாகத்திலேயே இருவரும் அடித்துக் கொண்டனர். அப்போதுதான் தாலிச் சங்கிலி பிய்ந்ததும், 5 பவுன் சங்கிலி ஸ்டெல்லா கைக்குப் போனதும் நடந்தது. தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது தலைமை ஆசிரியையின் 5 பவுன் தங்கச் சங்கிலியைத் தர மறுத்து அடம் பிடித்தார் ஆசிரியை ஸ்டெல்லா. மேலும் ரத்தின ஜெயந்தி மீதும் அவர் சரமாரியாக புகார் கூறினார். கடந்த 3 வருடமாக தலைமை ஆசிரியை தன்னை துன்புறுத்தி வந்ததாக அவர் புகார் கூறினார்.




அவர் கூறுகையில், என்னை  3 வருடங்களாக டார்ச்சர் செய்கிறார். ஸ்டுடன்ட்ஸ் முன்னாடி என்னை கேவலமாக பேசுகிறார். பெற்றோரிடம் பொய் குற்றசாட்டு எழுதி வாங்கிறார். இல்லாத பொல்லாத குற்ற சாட்ட சொல்லி எழுதி வாங்குகிறார் . அவர் நேர்மையான தலைமை ஆசிரியராக இருந்தால் விசாரித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவராகவே எழுதி கையெழுத்து போடச் சொல்கிறார் என்று கூறினார்.


இரு ஆசிரியர்களிடையே ஏற்பட்ட மோதலால் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு ஆசிரியர்களையும் சமாதனம் செய்ய முற்பட்ட நிலையில் அது வேலைக்கு ஆகவில்லை. தற்போது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது என்று 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியை ஸ்டெல்லா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.