மணிப்பூர் சம்பவம்: அரசு வக்கீலை கேள்விகளால் துளைத்தெடுத்த தலைமை நீதிபதி

Aadmika
Jul 31, 2023,05:08 PM IST
டில்லி : மணிப்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.  அவர் கேட்ட கேள்விகளால் வழக்கறிஞர்கள் அனைவரும் ஆடிப்போய் உள்ளனர்.

மணிப்பூர் வன்முறை மற்றும் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட விவகாரம் உள்ளிட்ட தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மற்ற மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுடன் மணிப்பூர் சம்பவத்தை ஒப்பிட்டு அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அரசு வழக்கறிஞரின் இந்த பேச்சால் கோபமடைந்த தலைமை நீதிபதி சரமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தார்.



அவர் கூறுகையில், நீங்கள் என்ன சொன்னாலும் மணிப்பூர் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது உண்மை தானே? இது நடந்தது, அது நடந்தது என விவரிப்பதால் மணிப்பூரில் நடந்தது சரி என்று ஆகி விடாது. மணிப்பூரை போன்ற குற்றங்கள் அனைத்து இடங்களில் நடக்கிறது தானே? இப்போது மணிப்பூர் விவகாரத்தை எப்படி கையாள போகிறோம் என்பது தான் கேள்வி. அதை மட்டும் சொல்லுங்கள். இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களையும் பாதுகாக்க முடியும் என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க முடியாது என்கிறீர்களா?  என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் வாதாடிய பெண் வழக்கறிஞர், விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்த அரசுக்கு தடையில்லை என்றால் எங்களுக்கும் தடையில்லை என்றார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டது என்ற புள்ளி விபரத்தை அரசு இதுவரை வெளியிடவில்லை. அதை முதலில் மாநில விவகாரத்துறை வெளியிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுள்ளார். 

இதனையடுத்து 6000 எஃப்ஐஆர்.,கள் தவிர, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், மே 04 ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. மே 18 வரை ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை. ஜூன் மாதம் தான் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் வந்துள்ளது. ஜூலை 19 தான் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. அதற்கு பிறகு கோர்ட் தலையிட்ட பிறகு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 நாட்களாக அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஒரு வழக்கு பதிவு செய்ய 14 நாட்களா? என்றார்.

இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற மத்திய அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த செயலுக்கு கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.