குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேமுதிக என்றைக்குமே ஏற்காது.. பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்!

Meenakshi
Mar 12, 2024,05:28 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக மக்களை பிளவுப்படத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


மக்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இச்சட்டத்தின் தன்மை மற்றும் வழிமுறைகளையும், அது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என வெளிப்படையாக மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: மதத்தால், மொழியால், ஜாதியால், உணர்வால் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக ஒற்றுமையாக இணைந்து, உலகிலேயே கலாச்சாரம் நிறைந்த நாடாக மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும், நமது இந்திய நாட்டின் குடியுரிமைச் சட்டம் என்கிற சட்டத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்துவதையோ, பிரிவினை ஏற்படுத்துவதையோ, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றைக்கும் ஏற்காது. 




இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவது மிக மிக முக்கியமான ஒன்று. எனவே இந்தச் சட்டத்தின் முழு விவரத்தையும் அனைத்து மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் இந்த சட்டம் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்கின்ற உத்திரவாதத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.


தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அனைத்து மக்களிடையே இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ள தன்மை மற்றும் வழிமுறைகளை எப்படிப்பட்ட சட்டங்களை அறிவிக்க போகிறார்கள் என்றும், அதை எப்போது அமல்படுத்தப் போகிறார்கள் என்றும், இந்த சட்டம் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா? என்றும் வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக மத்திய அரசு விளக்கம் தர வேண்டும். அப்போது தான் இந்த சட்டம் ஏற்புடையதா?  இல்லையா?  என்று தெரிந்து கொள்ள முடியும். இதுவரை இந்த சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.