தமிழ்நாடு முழுவதும்.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. புனித கதவைத் திறந்து வைத்த போப்பாண்டவர்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வாடிகன் சிட்டியில் உள்ள பேராலயத்தில் நள்ளிரவு நடந்த சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் புனித கதவைத் திறந்து நற்செய்தியை அளித்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு நாதர் அவதரித்த நாள்தான் கிறிஸ்துமஸாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவில் அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. இன்று காலையில் கிறிஸ்துமஸையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புத்தாடை அணிந்து கிறிஸ்துவர்கள் மகிழ்ச்சியாக இயேசு நாதரின் பிறப்பைக் கொண்டாடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். நேற்று நள்ளிரவில் நடந்த திருப்பலியிலும், காலை நடந்த விசேஷ வழிபாட்டிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி - காரைக்கால்
புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. தூய இருதய பேராலயத்தில் கிறிஸ்துவின் பிறப்பு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதைப் பலரும் கண்டு மகிழ்ந்தனர். காரைக்கால் உள்ளிட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
புனித கதவைத் திறந்து வைத்த போப்பாண்டவர்
கிறிஸ்துமஸையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமாக கருதப்படும் வாடிகன் சிட்டியில் நடந்த நள்ளிரவு பிரார்த்தனையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அப்போது புனிதக் கதவை திறந்து வைத்து அவர் மக்களுக்கு அருளாசி வழங்கினார்.
செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அபோபது புனிதக் கதவைத் தட்டி அதைத் திறந்து வைத்தார் போப்பாண்டவர். பைன் மர கிளைகள், ரோஜாப் பூக்கள் உள்ளிட்டவற்றால் அந்த புனிதக் கதவு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை ஐந்து முறை போப்பாண்டவர் தட்டியதும், கதவுக்குப் பின்னால் இருந்த அவரது உதவியாளர்கள் கதவைத் திறந்தனர். புனிதக் கதவைத் திறப்பதற்கு முன்பு பல்வேறு உலக மொழிகளில் நற்செய்திகள் வாசிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற வருடத்தை நம்பிக்கையின் யாத்ரீகர்கள் என்ற பெயரில் புனித ஆண்டாக கொண்டாட வாடிகன்சிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இந்த கொண்டாட்டமானது 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி வரை கொண்டாடப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்