சித்ரா பவுர்ணமி.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம்

Meenakshi
Apr 23, 2024,12:09 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில்  சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பெரும் திரளாக பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகம் என்பதால் நீண்ட வரிசையில் அதிகாலையில் இருந்து காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்தால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.  அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள். குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாதங்களில் வரும் பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த மாதங்களில் பல லட்சக் கணக்கான  பக்தர்கள் இந்த மலையை சுற்றி வந்து சாமிதரினம் செய்வார்கள்.




இந்தாண்டிற்கான சித்திரை மாத பவுர்ணமி  இன்று என்பதால், அதிகாலை முதலே அதிக அளவிலான மக்கள் கூட்டம்  குவிந்தது. பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.அதன்படி  2500 சிறப்பு பஸ்களும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.


இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவித்திருந்ததற்கு ஏற்ப கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கிரிவலம் செய்த பின்னர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரின் தரிசனத்தை பார்த்தனர். 


இங்குள்ள பகுதிகளில் 5000த்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் தேவைக்காக அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.