சித்ரா பவுர்ணமி.. கிரிவல பக்தர்களுக்காக.. திருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Meenakshi
Apr 22, 2024,06:42 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 2500 சிறப்பு பஸ்கள், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. அக்னி தலமான இக்கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்தால் கடவுளின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாதங்களில் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி வந்து சாமிதரினம் செய்வார்கள்.


இந்தாண்டிற்கான சித்திரை மாத பவுர்ணமி தினம் நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் வருவதற்காக வெளி மாவட்டங்கள், வெளி ஊர்கள், ஏன் வெளி நாடுகளில் இருந்தும் வருவார்கள். இவர்களின் வசதிக்காக 2500 சிறப்பு பஸ்களும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. 

 



இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விழுப்புரம் மற்றும் வேலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


20 தனியார் மற்றும் 81 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் 6 சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள்,  108 அவசர வாகனங்கள் 20வதும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும். மேலும், 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.