என்ன கொடுமை.. சர்ஜரியின்போது பேசிக் கொண்டே இருந்த பாட்டியின்.. தலையில் ஓங்கி குத்திய டாக்டர்!

Manjula Devi
Dec 27, 2023,05:54 PM IST

பெய்ஜிங்: சீனாவில் வயதான பெண் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவரின் ஆலோசனையை கேட்காததால் அந்த பெண் டாக்டரால் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நடந்துள்ளது. ஆனால் தற்போதுதான் இது வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. பிரபல டாக்டர் அய் பென் இந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


சீனாவின் குய்காங் பகுதியில் உள்ள அயர் சைனா என்ற பிரபலமான கண் மருத்துவமனையில் 82 வயதான பெண் ஒருவர் கண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முதலில் லோக்கல் அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை தொடங்கிய நிலையில், அப்பெண்ணால் கண் இமைக்காமல் இருக்க முடியவில்லை போலும். இதனால் அடிக்கடி கண்ணை இமைத்தபடியும், தலையை ஆட்டியபடியும் இருந்துள்ளார். 




மருத்துவர் கூறும் ஆலோசனைகளை அந்தப் பெண் பின்பற்றவில்லை. மேலும் வயதானவர் என்பதால் டாக்டர் சொன்னதையும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து பேசியபடியும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அறுவை சிகிச்சை நிபுணர் கோபத்தில் அந்தப் பாட்டியின் தலையில் மூன்று முறை ஓங்கிக் குத்தி உள்ளார். இதில் அந்தப் பெண்ணின் நெற்றியில் காயங்கள் ஏற்பட்டது. 


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டாக்டர், அவசரம் அவசரமாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  


இத்தனை காலத்திற்குப் பிறகு வெளியான இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது. பலரையும் அதிர வைத்துள்ளது. டாக்டரின் இந்த மனிதாபிமற்ற செயலுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை நிபுணரை இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்த வயதான பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு மருத்துவமனை சார்பில் 500 யுவான்  இழப்பீடு வழங்கியதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 


டாக்டர் அய் பென் தான், சீனாவின் வுஹான் நகரில் கொரோனா பரவியபோது அதுகுறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டவர் என்பது நினைவிருக்கலாம்.