சீனா விசா வழக்கு : கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

Aadmika
Dec 24, 2023,09:15 AM IST

டில்லி : லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீன நாட்டினர் சிலருக்கு முறைகேடாக விசா பெற உதவிய விவகாரம் தொடர்பான வழக்கில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யான கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது 2011ம் ஆண்டு சீன நாட்டினர் சிலர் முறைகேடாக இந்தியாவிற்குள் வருவதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தனது தந்தையின் பதவியை பயன்படுத்தி, சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையை துவக்கி உள்ளது.




விசாரணை முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரத்திடம் முதலில் அது பற்றி கேட்ட போது, கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவதற்காக வந்ததாக தெரிவித்தார். வழக்கு பற்றி கேட்டதற்கு, அது எப்போதோ முடிந்து விட்டது. அந்த வழக்கு செயலற்றதானதால், அது முடித்து வைக்கப்பட்டது என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 முறை நான் அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகி விட்டேன். இது மிகவும் பொய்யான வழக்கு. அமலாக்கத்துறை அளித்த தகவல்களுக்கு எனது வழக்கறிஞர் மூலம் 100 பக்கத்திற்கு விளக்கம் அளித்து விட்டேன் என்றார்.


தற்போது மூன்றாவது முறையாக கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன் டிசம்பர் 12, 16 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு விசாரைணக்கு நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுத்து விட்டார். தற்போது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர்ந்து நடந்து வருவதால் தான் பிஸியாக இருப்பதாகவும், கூட்டத் தொடர் முடிந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாகவும் கூறி இருந்தார். தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் கார்த்தி நேரில் ஆஜராகி உள்ளார்.


சீன நிறுவனத்தின் உதவியுடன் பஞ்சாப்பில் மின் நிலையம் அமைக்க வேதாந்தா குழும நிறுவனத்தின் தல்வாடி மபோ பவர் லிமிடெட் முயற்சி செய்துள்ளது. இதற்கு பின்னணியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு, பாஸ்கர ராமன் என்பவர் பல முறைகேடுகள் செய்துள்ளார். இவர் கார்த்திக்கு மிகவும் நெருக்கமான அதிகாரி ஆவார். இந்த வழக்கில் குற்றவாளியான பாஸ்கரராமன் மீது சிபிஐ தொடர்ந்த நிதிமோசடி வழக்கை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.