கட்டி 6 மாசம் கூட முடியலை.. ஒரு கன மழைக்கே இப்படி ஒழுகுகிறதே ராமர் கோவில்.. அர்ச்சகர்கள் கவலை!

Meenakshi
Jun 25, 2024,05:19 PM IST

லக்னோ: கட்டி ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கருவறை  கன மழைக்கு ஒழுக ஆரம்பித்துள்ளது கோவில் அர்ச்சகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.


ராமாயணத்தின் படி, ராமர் பிறந்த இடமான அயோத்தி ராம்ஜென்ம பூமியில் மிக பிரம்மாண்ட கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவில் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார். ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.


ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூல் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. உலகின் தலைசிறப்பு கட்டிட கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த கோவில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 1800 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் இந்த கோவில் கட்டப்பட்டது. கோவில் பணிகளுடன் சேர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவிலை திறக்க பாஜக திட்டமிட்டு அயோத்தியில் அவசரமாக வேலைகள் நடத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லப்பட்டது.




கோவில் திறப்பை நாடு முழுவதும் பாஜகவினர் பெரிதாக கொண்டாடினர், நாடே அல்லோகல்லப்பட்டது. நாடு முழுவதும் கோவில்களில் டிவி ஸ்கிரீன் அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். இதை பெரிய அளவில் பாஜக முன்னெடுத்தது. காரணம், இது ராமர் கோவில் பெரிய அளவில் தேர்தலுக்குப் பயன்படும் என்று பாஜக நினைத்தது. ஆனால் தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் எடுபடவில்லை. உ.பியில் பெரும் பின்னடைவை பாஜக சந்தித்தது. உச்சமாக, ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி இடம் பெற்ற எம்.பி. தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


தற்போது பாஜகவினர் ராமர் கோவில் குறித்துப் பேசுவதே கிடையாது. பலரும் சமூக வலைதளங்களில் ராமர் கோவிலை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அடியோடு குறைந்து விட்டது. ராமரை கிட்டத்தட்ட பாஜகவினர் பலரும் ஒதுக்கி வைக்க ஆரம்பித்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கனமழை பெய்தது. இந்த மழையால் கோவிலின் உட்புறத்தில் மழை நீர் தேங்கி இருந்திருக்கிறது. மழை நீர் வடிய வடிகால் வசதி செய்யவில்லை என்றும், கருவறையிலேயே மழை நீர் ஒழுகுகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி கவலை தெரிவித்திருந்தாா். கோயில் கட்டுவதில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து கோயில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலில வந்து பார்த்து, அதை சரிசெய்யும்படி கட்டுமான குழுவிடம் கூறியுள்ளார்.


ஆக மொத்தம் அயோத்தி ராமர் கோவில் பிரமாண்ட கனவு என்ற நிலையிலிருந்து மாறி பரிதாப நிலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பது அதன் உண்மையான பக்தர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.