ராஜ்பவன் பெட்ரோல் குண்டு விவகாரம்: முதல்வர் தக்க நடவடிக்கை எடுப்பார்.. சபாநாயகர் அப்பாவு

Su.tha Arivalagan
Oct 27, 2023,01:39 PM IST

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கவர்னர் மாளிகை முன் பொட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே பூசல் அதிகரித்துள்ளது. திமுகவினரும் பாஜகவினரும் சமூக வலைதளங்களில் சரமாரியாக புகார்களைக் கூறி வருகின்றனர்.


இந்த நிலையில் இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பின்போது தனது கருத்தைத் தெரிவித்தார். அவர்  கூறுகையில், 2017ம் ஆண்டில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்று மற்றொரு சம்பவம் உள்பட இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பில் இருக்கிறார்.




தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் உள்ள அரசியல் கட்சிகள் தெரிந்து இதுவரை யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது இல்லை. ஒரு முறை பாஜகவை சேர்ந்த ராமநாதன் என்பவர் கோவையிலும், திண்டுக்கல்லில் பிரவீன் குமார், திருவள்ளூரில் பரமானந்தம் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் குமார் 2013ம் ஆண்டிலும் மற்றொரு சம்பவம் 2017ம் ஆண்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர். போலீஸ் விசாரணையில், பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காக, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். 


இதேபோல், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டனர். கமலாலயத்தில் இரு அணிகளாக செயல்படுவதாகவும், அவர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. 


கட்சியின் கவனத்தை ஈர்க்கவே பெட்ரோல் வீச்சு சம்பவங்களை நடத்துகின்றனர். ஆனால் ஒன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன் எனக் கூறியுள்ளார்.