உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

Manjula Devi
Apr 08, 2025,05:54 PM IST

சென்னை: ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் எதிரொலியால் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மு.க ஸ்டாலின் மாறியுள்ளார். அந்தப் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் திமுக எம்.பியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமா பி.வில்சன்.


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டதாகவும், துணைவேந்தர் பதவி நியமனத்தில் குறுக்கீடு செய்வதாகவும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர் ஆக முதல்வரை நியமனம் செய்தும், மேலும் பல முக்கிய மசோதாக்களையும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.


ஆனால் அவற்றை ஏற்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவருக்கு ஆளுநர் மசோதாக்களை அனுப்பியது செல்லாது. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 




இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி  இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


மறுபக்கம் ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின் மூலம் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது. அதில் முக்கியமானது, பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா. தற்போது உச்சநீதிமன்றம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று முதல்வர் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என். ரவி நீக்கப்படுகிறார். முதல்வர்தான் இனி வேந்தர் என்று திமுக எம்.பி. பி.வில்சன் தெரிவித்துள்ளார்.