சென்னையில் பிரதமர் மோடி.. சிரிக்க சிரிக்க வரவேற்ற மு.க.ஸ்டாலின்.. கலகல நிமிடங்கள்

Su.tha Arivalagan
Apr 08, 2023,03:34 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை பயணத்தின்போது அவருடந் முதல்வர் மு.க.ஸ்டாலின் படு இயல்பாக, சிரித்தபடி வரவேற்று, கையைப் பிடித்து பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத் திறப்பு, சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்கம், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாலத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். 



புதிய விமான முனையத் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிரித்த முகத்துடன் படு இயல்பாக பேசியபடி காணப்பட்டார். பிரதமர் ஏதோ கூற, பதிலுக்கு அவரது கையைப் பிடித்து ஸ்டாலின் சிரித்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆளுநர் ரவி, முதல்வர் இருந்த பக்கம் வரவில்லை. அதேசமயம், முதல்வர் அருகே, மத்திய இணை அமைச்சர் முருகன் காணப்பட்டார். முதல்வரும், பிரதமரும் சிரித்த முகத்துடன், சகஜமாக பேசிப் பழகியபடி காணப்பட்டதுதான் இன்றைய ஸ்பெஷல் ஆகும்.

விமான நிலைய நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்துக்குச் சென்றார். அங்கிருந்து அவர் சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் போய் அங்கு வந்தேபாரத் எக்ஸ்பில் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வழியெங்கும் அவருக்கு சாலைகளின் இரு மருங்கிலும் பாஜகவினர் திரண்டு நின்று மலர் தூவியும், பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டும், பாஜக கொடிகளை அசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.