முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Meenakshi
Mar 11, 2025,05:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் தொழில் துறையில் பெண்கள் அதிகளவு பங்கேற்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரியாக இருக்கிறது தமிழகம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நுழைவுவாயிலாக செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கியது திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். செங்கல்பட்ட மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நிறைவடைந்துள்ள திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.


அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  நேற்று நாடாளுமன்றத்தில் நடந்ததை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். அதாவது, ஹிந்தி சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ. 2000 கோடியை தருவேன் என்று திமிராக பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக அழித்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில தடைகள் மட்டும் இல்லை என்றால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும்.




கல்விக்குள் மாணவர்களை கொண்டு வர முயற்சி செய்யாமல் கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை திட்டங்களும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார் மயமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் பொருத்துவது, குழந்தைகளுக்கு கூட பொது தேர்வு, பொறியியல்  படிப்புகளுக்கு நீட் மாதிரியான நுழைவுத் தேர்வு என்று இப்படி நிறைய இருக்கிறது. கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்துக்கு இந்த கொள்கை வலிவகுக்குகிறது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் தான் கல்வி நிதியைத் தருவேன் என்று அமைச்சர் பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்.


அதனால் தான் ரூ. 2000 கோடி அல்ல, ரூ.10,000 கோடி தந்தாலும் உங்களுடைய  நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக திட்டவட்டமாக  சொன்னேன். இந்த மேடையிலும் இதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அநாகரீகமானவர்கள் என்று அமைச்சர் பிரதான் நாவடக்கம் இல்லாமல் பேசி இருக்கிறார். அரை மணி நேரத்தில் அவர் பேசியதை திரும்ப பெற வைத்திருக்கின்றனர் நம் தமிழ்நாட்டு எம்பிக்கள். அவர்களுடைய போர் குரலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதிமுக உறுப்பினர் போல் அல்லாமல் யாருக்கும் பயப்படாமல் உரிமைக்காக போராடுவோம் என்று திமுக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.