சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு விருது பூம்புகார் விருதுகள்.. வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Feb 18, 2025,03:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைக்க சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூபாய் 403 கோடியில் டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூபாய் 314 கோடியில் டைடல் பூங்கா கட்டப்பட உள்ளது. திருச்சி மதுரையில் கட்டும் டைடல் பூங்காக்கள் மூலம் 12000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மதுரை, திருச்சியில் தரைத்தளம் மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.


இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பூம்புகார் விருதுகளை முதல்வர் வழங்கினார். பூம்புகார் மாநில விருது திட்டம் தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் கைவினை வளர்ச்சிக்கு பங்களித்த சிறந்த கைவினைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை கவுரவிக்கும் வகையில் ரூ.50,000 ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 




நடப்பாண்டு பூம்புகார் விருதுகளுக்கு தேர்வான கலைஞர்களுக்க சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். கைத்தறி தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி, படைப்புகளில் சிறந்து 10 கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அத்துடன், 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைகளுக்கு வாழும் கைவினை பொக்கிஷம்  விருதுகள் வழங்கப்பட்டன. 


மேலும், டெல்லி தமிழ் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்க புத்தாக்க பணிக்காக ரூபாய் 50 லட்சம் காசோலையை தமிழ்ச் சங்கத் தலைவர் உள்ளிட்டோருக்கு முதல்வர் வழங்கினார். சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டிட விரிவாக்க பணிக்காக ரூபாய் 50 லட்சத்தை முதல்வர் வழங்கினார்.