சபாஷ் குகேஷ்.. இந்தா பிடிங்க ரூ. 30 லட்சம்.. வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Sep 12, 2023,02:59 PM IST
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் செஸ் போட்டியில் உலகத் தரவரிசையில் 11-ஆவது இடத்தையும், இந்திய அளவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் வென்றதன் மூலம் இந்த சாதனையைப் படைத்தார். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார்.



செஸ் வரலாற்றிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வீரர் ஆகியுள்ளார் குகேஷ் . கடந்த 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றவர் இவர். இந்நிலையில், இந்திய செஸ் வீரர்களில் முதலிடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். அண்மையில் முடிந்த செஸ் உலகக் கோப்பை தொடரில் காலிறுதி போட்டி வரை அவர் முன்னேறி இருந்தார். தற்போது உலா தரவரிசையில் டாப் 11-ல் இடம் பிடித்துள்ள அவர், கெரோனா தொற்றின் போது செஸ் விளையாட்டு சார்ந்த முக்கிய அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவுடன் கவனம் செலுத்தினார். அதன் பலனாக உலக தரவரிசையில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டார். 

உலக தரவரிசையில் முதல் 25ல் இடம் பிடித்துள்ள இந்தியர்களில் குகேஷ் 8ம் இடத்தையும். விஸ்வநாதன் ஆனந்த் 9ம் இடத்தையும், பிரக்ஞானந்தா 19ம் இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பிரக்ஞானந்தா தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இப்போது  குகேஷ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமை செயலகத்தில்  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 



இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். குகேஷ் செஸ் போட்டி பெற்ற அனுபவங்களையும் , அதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சி குறித்தும் முதல்வரிடம் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து, குகேஷ்  சாதனையை பாராட்டி தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம்  ஊக்கத்தொகையும், நினைவு பரிசும்  வழங்கப்பட்டது.