இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
சென்னை: மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.இவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கோபாலபுரம், சிஐடி காலனிக்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் தொண்டர்களை சந்தித்த முதல்வர்மு.க ஸ்டாலின், மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும், இருமொழி கொள்கையை கொண்டு வர வேண்டும் இது தான் எனது பிறந்த நாள் வாழ்த்து செய்தி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கழக தொண்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மாநிலத்தின் உரிமையை பெற வேண்டும் என்பது தான் என்னுடைய கவலை என்றும் தெரிவித்துள்ளார்.